வெள்ளி, 27 டிசம்பர், 2024

அற்புதமான மனிதரைச் சந்தித்தேன்.

 




இன்று (26.12.2024) ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். அவர் பெயர் திரு.உதயன். சென்னையில் வசிப்பவர், சென்னையில் பணிபுரிவரும்கூட. இவரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. இன்றுதான் நண்பர் திரு.அரிகரசுதன் அறிமுகம் செய்துவைத்தார்.

கோயம்புத்தூர் - நவஇந்தியா அருகே உள்ள அட்சயம் உணவகத்தில் மழை தூரிக் கொண்டிருந்த நேரத்தில் சந்தித்தோம். மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரைப் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அங்கிருந்து கிளம்பி ஹேப்காலேஜ் to சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள  கிளஸ்ட்ரஸில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

அந்தக் சமயம் ஒரு மனிதர் எங்களைக் கடந்து சென்றார். நாங்கள் நிமிர்ந்து பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. கற்றது தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் திரு.ராம் அவர்கள். அவரைப் பார்த்ததும் நானும் நண்பர் உதயனும் சென்று பேசினோம். ரொம்ப எளிமையாக பேசினார். இறுதியாக கைகுலுக்கி விட்டு சந்திக்கலாம் என்று சென்று விட்டார். மீண்டும் அதை மரத்தடியில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது நேரம் போனதே தெரியவில்லை மணி 10.30 மணியாவிட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறோம். பல வருடங்கள் பார்த்து, பேசிப் பழகிய நண்பர்கள் போல.

எங்கள் உரையாடலில் பெருங்கருக்கான எச்சங்கள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் ஜி.பி.எஸ்  (GPS) மேப், மேப்பிங், கள ஆய்வின் அணுகுமுறை போன்ற பல பொருண்மையில் எங்கள் உரையாடல் இருந்தது. நீண்ட நெடிய உரையாடலில் இதுவரை, செய்த பணிகள் குறித்தும் இதற்குப் பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த நேரம் ஒரு பொன்னான நேரம் என்றே கருதுகிறேன். திரு.உதயன் அவர்களின் பணி வேறு ஒன்றாக இருந்தாலும் அவரின் ஆர்வம் காரணமாக நல்ல தமிழ் ஆளுமைகளோடும் தமிழுக்காக தொண்டாற்றி வரும் ஆளுமைகளோடும் இணைந்து பல அறிய வேலைகளைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல மனிதரை அறிமுகம் செய்த நண்பர் அரிகரசுதனுக்கு நன்றி






ஞாயிறு, 3 நவம்பர், 2024

காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 


காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 


முன்னுரை

உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். உலகக் காப்பியங்கள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளமையைக் காணலாம். காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காப்பியம் விளக்கம்

காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை ஆகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.

காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.

தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடல் திரட்டுக்களாகவே உள்ளன. தமிழ் மொழியில் 3 அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.

காப்பியம் ஆங்கிலத்தில் EPIC எனப்படுகின்றது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர். காப்பியம் என்ற சொல்லில் காப்பு+இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.

நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 

நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 


முன்னுரை

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும். தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ் நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

நாடகம் - சொல் விளக்கம்

நாடகம் என்பதனைக் குறிக்கும் Drama என்ற சொல், கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்தது. ட்ரமோனியன் (Dramonian) என்ற கிரேக்கச் சொல்லே இதன் மூலமாகும். இதன் பொருள் ‘ஒன்றைச் செய் அல்லது ஒன்றைப் போல நடித்துக் காட்டு என்பதாகும்.

நாடகம் என்று வழங்குகிற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். ‘நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு + அகம் = நாடகம் என்று ஆயிற்று என்று அவ்வை சண்முகம் கூறுவார். ஆனாலும் நாடகம் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் வரும் இடங்களை நோக்கினால் இன்று நாம் நாடகம் என்பதற்குக் கொள்ளும் பொருளில், அன்று கூறப்படவில்லை என்று அறியலாம். நாட்டியம் என்ற கருத்திலேயே காணப்படுகிறது.

நாடகம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட என்று பாவாணர் கூறுகிறார். ‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற சொற்களும் ஆடலைக் குறிப்பன.

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

 

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

 


ஒரு மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும் போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும், ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே முந்தியது என்பர். இந்த அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர் அறிஞர்.

உரைநடை என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம்தான் உரைநடை. கவிதை போல அணிகள் இன்றி, நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை, பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. இதனால் இது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங்கள், ஒலிபரப்பு ஊடகங்கள், திரைப்படம், கடிதங்கள், வரலாறு, மெய்யியல், வாழ்க்கை வரலாறு, போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தொடர்புகளுக்குப் பயன்படுகின்றது. இத்தகைய உரைநடை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் காண்போம்.

ஒலிப்பு (உச்சரிப்பு) முறைகளும் பொருள் வேறுபாடுகளும்

 

ஒலிப்பு (உச்சரிப்பு) முறைகளும் பொருள் வேறுபாடுகளும்


 மயங்கொலிச் சொற்கள்

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஒலிப்பு (உச்சரிப்புமுறைகள்

ல-ள ஒலிப்பு முறை

'' என்ற எழுத்தை மேல்நோக்கிய 'லகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நுனிநாக்கு முன்பல்வரிசைக்கு மேல் உள்ள அண்ணத்தழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'ழகரமும்' 'ளகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சூளாமணி : மந்திர சாலைச் சருக்கம் தோலாமொழித் தேவர்

 


சூளாமணி :

மந்திர சாலைச் சருக்கம்

தோலாமொழித் தேவர்


 

சூளாமணி காப்பியத்தின் கதை மாந்தர்கள்

காப்பியம் பெயர் - சூளாமணி

சமயம் - சமணக் காப்பியம்

காலம் - கி.பி.10 ஆம் நூற்றாண்டு

சருக்கம் - 12 சருக்கங்கள்

பாடல்கள் - 2131 பாடல்கள்

பா - விருத்தப்பா

நூலின் தன்மை - வடமொழித் தழுவல்

தழுவிய வடமொழி நூல் - ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம்

ஆசிரியர் - தோலாமொழித் தேவர்


நாடு - பரத கண்டம் - சுரமை நாடு

பரத கண்டம்

நாடு - சுரமை

தலைநகரம் - போதனமா நகர்

மன்னன் - யாபதி

மிகாபதி (மூத்த மனைவி) -  சசி (இளைய மனைவி)

விஜயன் (மிகாபதியின் மகன்)   - திவிட்டன் (சசியின் மகன்)

விஜயன் - வெண்மை நிறம் உடையவன் - திவிட்டன் - கருமை நிறம் உடையவன்

பலராமனைப் போல் வீரமுடையவன் - கண்ணனைப் போல் வீரமுடையவன்

நிமித்திகன்

 

வித்தியாதர நாடு

சுவலனசடி (மன்னன்)

மகன் - அருகக்கீர்த்தி  - மகள் - சுயம்பிரபை

அச்சுவகண்டன் (வடசேரி தேசத்தின் மன்னன்)

மருசி (தூதுவன்)

சதவிந்து (நிமித்ததன்)

அரிமஞ்சு (அமைச்சன்)

அரிகேது (மந்திரவாதி)

 சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் இயற்றப்பட்டது ஒரு சமண சமயம் சார்ந்த நூல். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவரால் இந்நூல் இயற்றப்பட்டது. தோலாமொழித் தேவர். ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். இந்நூல். நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் என 12 சருக்கங்களையும் 2131 பாடல்களையும் கொண்டது. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.

வெள்ளி, 26 ஜூலை, 2024

கோவையில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலக் கூடுகை

 


இன்று (26.07.2024) கோவையில் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலக் கூடுகை நடைபெற்றது.

இக்கூடுகையில் விக்கிமூலத்தில் அதிகப் பங்களிப்பு செய்த லோகநாதன் (எ) தகவலுழவன் மற்றும் பேராசிரியர்களான

முனைவர் ந.இராஜேந்திரன்,

முனைவர் த.சத்தியராஜ்,

முனைவர் பா.கவிதா,

முனைவர் இரா.குணசீலன்,

முனைவர் இரா.நித்யா,

முனைவர் க.பாலாஜி,

பேராசிரியர் இரா.அரிகரசுதன்,

முனைவர் ம. மைதிலி,

முனைவர் வ.காருண்யா,

பேராசிரியர் லலிதா

திரு. ஸ்ரீதர்,

ஆகியோரும் இணைந்து தேவநேயப் பாவாணரின் 52 தொகுதிகளையும் மெய்ப்புப் பார்த்து, மேம்படுத்தி விரைவில் விக்கிமூல மின்நூலகத்தில் தரவு மேம்பாடு செய்வது குறித்தும் அதற்கானத் திட்டங்கள் குறித்தும் உரையாடினோம்.

தனியார் கல்லூரிகளில் பணி செய்யும் தாங்கள் ஒன்றிணைந்து தமிழுக்காக வேலை செய்வதைப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் தகவலுழவன்.

பேராசிரியர்கள் விக்கி மூலத் திட்டம் குறித்து இதுவரை என்னென்ன பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன இனி செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து கலந்துரையாடினோம்.

இந்தப் பணிக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் இன்றைய காலகட்டத்தில் பெரிதாக நம்பப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் கான தரவுகளை வெகுவிரைவாக விக்கி மூலத் திட்டத்தில் கொடுத்து விடலாம் என்பது பேராசிரியர்களின் கருத்தாக அமைந்தது.









வெள்ளி, 29 மார்ச், 2024

கலித்தொகை - நெய்தற் கலி - 119 – நல்லந்துவனார்

 


கலித்தொகை - நெய்தற் கலி - 119

பாடியவர் – நல்லந்துவனார்

 

v  விழுமியம் – பிரிவாற்றாமை

v  கூற்று விளக்கம் – தலைவனின் பிரிவைத் தாங்க இயலாத தலைவி, தோழிக்குக் கூறியது.

v  திணை – நெய்தல்

 

நல்லந்துவனார்

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம். 

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:

அகநானூறு 43 - பாடல் 1

கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33

நற்றிணை 88 - பாடல் 1

பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு - 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல் - விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள் - சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார். 

சொல் விளக்கம்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சிந்து முதல் பொருநை வரை - சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு

 

சிந்து முதல் பொருநை வரை



09.02.2024 ன்று கோவை மாவட்டம் பேரூர் - தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் நிகழ்ந்த சிந்து முதல் பொருநை வரை எனும் மாநில அளவிளான தொல்லியல் கருத்தரங்கில் சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு (இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி கள ஆய்வை முன்வைத்து)

எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.

நான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி ஆகிய மூன்று ஊர்களிலும் மேற்பரப்புக் கள ஆய்வு சேகரித்த தொல்பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தேன். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி மாணவர்களும் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களும் அரசுக் கல்லூரி மாணவர்களும் கண்டு களித்தார்கள்.  சிந்துவெளிப் பண்பாட்டை முன்னெடுக்கும் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களும், கீழடியை உலகறிய செய்த திரு கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா ஐயா அவர்களும், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் அ.கருணானந்தன் ஐயா அவர்களும், பேரூர் மடத்தின் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் மேற்கு மண்டல அமைப்பாளர்  பேராசிரியர் முனைவர் த.திலீப்குமார்  அவர்களும், தோழர் ரமணி அவர்களும் பார்த்து மகிழ்ந்து பாராட்டியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் எனக்குப் பெரும் துணையாக இருந்த எனது மனைவி முனைவர் பா.கவிதா அவர்களுக்கும் என் அன்பு மகன் இரா.க.தமிழ்ச்செழியனுக்கும் அந்தக் கல்லூரி மாணவர் நிர்மல் குமார் அவர்களுக்கும், போட்டோ எடுத்து உதவிய சஞசீவி மாணவருக்கும் மேலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும்  நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

அப்பொருள்களைப் பார்வையிட்ட போது என் மகனின் ஈடுபாட்டைப் பார்த்து அருகில் அழைத்து இரா.க.தமிழ்ச்செழியனின் இரு தோள்களிலும் கைவைத்து புகைப்படம் எடுக்கச் சொன்ன ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் நான் சேகரித்த பொருட்களில் ஒருசில பொருட்


கள் முக்கியமானவை என்றும் இப்பொருள் வைகை நதிக்கரை ஓரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை பாதுகாத்துவையுங்கள் எழுதுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்திய  
கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா  ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல…

எங்களைப் புகைப்படம் எடுத்து நினைவலைகளில் தக்க வைத்த புகைப்பட கலைஞர், தொல்லியல் ஆர்வளர் நண்பர் ஜெயக்குமார்  அவர்களுக்கு நன்றி.








 
நன்றி.