வெள்ளி, 29 மார்ச், 2024

கலித்தொகை - நெய்தற் கலி - 119 – நல்லந்துவனார்

 


கலித்தொகை - நெய்தற் கலி - 119

பாடியவர் – நல்லந்துவனார்

 

v  விழுமியம் – பிரிவாற்றாமை

v  கூற்று விளக்கம் – தலைவனின் பிரிவைத் தாங்க இயலாத தலைவி, தோழிக்குக் கூறியது.

v  திணை – நெய்தல்

 

நல்லந்துவனார்

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம். 

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:

அகநானூறு 43 - பாடல் 1

கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33

நற்றிணை 88 - பாடல் 1

பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு - 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல் - விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள் - சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார். 

சொல் விளக்கம்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.