வெள்ளி, 5 ஜூன், 2020

எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி வட்டுச்சில்லுகள்



முனைவர் ந.இராஜேந்திரன்
Dr N.Rajendran
தொல்லியல்
பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகத்தின் தொல்லெச்சங்கள்
சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு அருகில் எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி ஆகிய ஊர்களில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்த வட்டுச்சில்லுகள்.

புதன், 3 ஜூன், 2020

தொல்லியல் : எட்டிசேரி Archeology place : Ittichery




முனைவர் ந.இராஜேந்திரன்
Dr N.Rajendran
தொல்லியல்
எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி
பெருங்கற்காலத் தொல்லெச்சங்கள்

செவ்வாய், 2 ஜூன், 2020

சீவலமாறனின் மொழியாடலில் கற்றலின் முக்கியத்துவம்


சீவலமாறனின் மொழியாடலில் கற்றலின் முக்கியத்துவம்

Dr N.Rajendran
முனைவர் ந.இராஜேந்திரன்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)
கோயம்புத்தூர் - 28.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேரோடிக் கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி, ஆறாம் அறிவோடு இயங்கி, வாழ்க்கை மேன்மையுற கல்வியறிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக  அமைகிறது என்பதைக் கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை.35) என்னும் சீவலமாறனின் மொழியாடல்வழி விளக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

சீவலமாறன்
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564-1604) வரை ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது.

இவர் ஒரு அரசர் என்பதோடு அன்றி, திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும் தமிழிலும் தோன்றிய நளன் கதைகூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக்கூறும் வெற்றிவேற்கை, காசிகாண்டம், கூர்ம புராணம், மகாபுராணம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமம் நூலையும் தமிழில் தந்துள்ளார். சீவலமாறன் எனும் பெயர் உண்டு என்பதைப் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாத கவி என்பவர் இவரைப்பற்றி இயற்றிய சீவலமாறன் கதை என்னும் நூலால் அறியமுடிகிறது (https://ta.m.wikipedia.org).

மனித இனத்தால் இழிதொழிலெனக் கருதப் பட்டுப் புறக்கணிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று பிச்சை எடுப்பது.  இப்படிப்பட்ட இழிதொழிலைச் செய்து பிழைத்துக்கொள் என்று எவரும் அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி இருக்க அதிவீரராம பண்டியரான சீவலமாறன்  இழிதொழிலான பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக்கொள் என ஏன்  அறிவுறுத்த வேண்டும்.

ஆண்களுக்கு அறிவு (கல்வி), ஆற்றல், புகழ், கொடை, ஆராய்ச்சி, பழிபாவங்கட்கு அஞ்சுதல் ஆகியவை பெருமைக்குரிய குணங்கள் என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார். இதனை,

பெருமையும் உரனும் ஆடுஉ மேன
                          (தொல்.பொருள்.98)
எனும் நூற்பா பறைசாட்டுகின்றது. இந்நூற்பாவைச் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

சங்க இலக்கிய காலக்கட்டத்தில் மகனைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமையாகவும்  கல்வியறிவு உடைய சான்றோனாக்குவது தந்தையின் கடமையாகவும் இருந்திருக்கிறது. கடமை என்றால் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால்தான் தமிழர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டினை முன்நிறுத்தி அதன்படித் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார்கள். இந்த நகர்த்தல்தான் உலக அளவில் தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதை,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே 
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே 
                         (புறம்.312:1-2)

எனும் அடிகள் சான்றுபகர்கின்றன. இவ்அடிகளையும் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

இப்பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்குத் தொடர்ந்து ஏழு பிறப்பிலும் துணைசெய்யும் எனும் குறளான,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
                                 (குறள்.398)

எனும் குறளைச் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.
கற்றவர் புகழை இம்மையிலும் மறுமையிலும் வாழச்செய்வது கல்வியே. கல்வியைப் போல் அறியாமை எனும் நோயைப் போக்கக்கூடிய மருந்து இவ்வுலகில் வேறெதுவும் இல்லை எனும்,

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாங்காணேங் கல்விபோன்
மம்மர் அறுக்கும் மருந்து
                                   (நாலடியார்.132)
எனும் இவ்அடிகளையும் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

கல்விதான் ஒருவனைப் பெருமைப்பட வைக்கிறது, சான்றோனாக்குகிறது, ஏழு பிறப்புக்கும் துணைவருகிறது, அறியாமை இருளை அகற்றுகிறது என்பதையெல்லாம் படித்துப் படித்து வியந்துபோன சீவலமாறன் அடுத்த தலைமுறைக்கு இச்செய்தியைக் கட்டாயமாகக் கடத்த வேண்டும் எனும் கருத்துடையவனாக இருந்திருக்க வேண்டும். எப்படிக் கடத்துவது, வள்ளுவனின் குறளைப்போல் நறுக்குச் சுறுக்கென்று புத்தியில் உரைக்கும்படி சொல்ல வேண்டும் என எண்ணியிருப்பார். இதன் விளைவுதான்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்ற பாடல். ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த அடிகள் உணர்த்துகின்றன. 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அடிகளுக்குப் பொருளுரைக்கும் பலர் பிச்சை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் சீவலமாறன் இப்பாடலைப் படைக்க வில்லை. மாறாக, தனக்குத்தெரியாத ஒன்றை அறிந்தவரிடம், தெரிந்தவரிடம் கேட்டுக் கற்றுக்கொள்க என்ற நோக்கத்தில் தான் இப்பாடல் படைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.

இவர் கூற்றுப்படியே பிச்சை எடுத்துக் கற்க வேண்டும் என்ற நோக்கில் பாடல் படைக்கவில்லை என்றால் ஏன் பிச்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? பிச்சை என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாமே?

பிச்சை என்ற வார்த்தை சங்க இலக்கியமான நற்றிணை.300, குறுந்தொகை.277:3 ஆகிய இரண்டு இடங்களில் பதிவுசெய்யப் பெற்றிருக்கிறது. இரண்டு இடங்களிலும் பிச்சை என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பெற்றுள்னளன.

அன்றைய சூழலில் கல்வி கற்றவர்கள் அதிகம் இல்லை என்பது ஒரு காரணம் மட்டும் அல்ல பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் கல்வி கற்பதற்குப் பொருளாதாரம் இன்று மட்டுமல்ல அன்றும் பொருளாதாரம் ஒரு தடையாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் பொருளாக, உழைப்பாக இப்படி ஏதோ ஒருவிதத்தில் கொடுத்துதான் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சூழல் இருந்திருக்கிறது. அதனால்தான் சீவலமாறன் பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தன் பாடலில் பிச்சை என்ற வார்த்தையைப் பயன் படுத்மியிருக்க வேண்டும்.


கல்வி கற்பதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருப்பதை அறிந்துதான் கல்வி கற்க தடையாக பொருளாதாரம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். ஏனெனில் கல்வி கற்றால்தான் வாழ்க்கைச் செம்மையாக வாழ முடியும், நலமாக வாழ முடியும், நல்லது கெட்டதைத் தெரிந்து தெரியாதவற்றைத் தெரிந்து உணர்ந்து வாழ்க்கையை வாழ முடியும் என்ற காரணத்தால் கல்வி அறிவு அவசியம் என்பதை உணர்த்தி இருக்கிறார்.