கைமாறு
உப்புமூட்டை
முனைவர் ந.இராஜேந்திரன்
அப்பா இருந்தபோது அவருக்கு
நான் செய்ய நினைத்தவற்றில் செய்யாமல் போனது அதிகம். அதன் வருத்தமும் அப்பாவோடு இருந்த
பொழுதுகளும் அடிக்கடி என் மனக்கிடங்கில் மேலிட்டுக்கவிதையாக உருமாறின. உருமாறியக் கவிதைகளைத்
தொகுத்து அப்பாவின் நினைவாக நூலாக்கம் செய்துகொண்டிருந்தேன். வகுப்பில் அப்பா பற்றிப்
பேசிக்கொண்டிருந்தபோது நான் அவருக்காக எழுதிய ஒரு கவிதையைப் படித்துக்காண்பித்தேன்.
மறுநாள் காலை மாணவி ஒருவர் அவர் அப்பாவை நினைத்து ஒரு கவிதை எழுதி வந்து என்னிடம் கொடுத்தார்.
படித்துப் பார்த்தேன். என்னைப் போலவே அவருக்கும் அப்பா இல்லை என்பதை உருக்கமாகப் பிரதிபலித்தது
அக்கவிதை. இதேபோல் எத்தனை மாணக்கர்கள் தங்கள்
அப்பாவைப் பிரிந்தும் அப்பா இல்லாமலும் வேதனையோடு
வாழ்கிறார்கள். அவர்களின் வலிகளையும் உணர்வுகளையும்
இந்நூலின்வழிப் பறைசாற்ற வேண்டுமென எண்ணியதின் விளைவே இத்தொகுப்பு.
இந்நூலில் என்னோடு கைகோர்த்துப் பயணித்திருக்கும் ஏனைய கவிஞர்களுக்கும், நல்லதொரு அணிந்துரை வழங்கிய நண்பர் முதுமுனைவர் பகவதிசுந்தரம் சிவமாருதி அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.