ஆசாரக்கோவை
பெருவாயின்
முள்ளியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான
ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் நூல்.
ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் என்றும்,
கோவை என்பதற்கு அடுக்கிக் கூறுதல் என்றும் பொருள். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்நூலை வண்கயத்தூரைச்
சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இயற்றியுள்ளார். வண்கயத்தூர்
என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில்
மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற சிறப்புப் பாயிர அடியானது சிவபெருமான் மூன்று மதில்களை அழித்த செய்தியைக் கூறுவதால் இவர் சைவ சமயத்தவர் எனலாம்.
ஆச்சாரத்தின் வித்துகளாக நன்றி
அறிதல், பொறையுடைமை, இன்சொல் பேசுதல்,
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியோடு
வாழ்தல், அறிவுடைமை, ஒப்புரவு ஆற்ற
அறிதல், நல்இனத்தாரோடு நட்டல் ஆகிய எட்டு பண்புகளை எடுத்துரைக்கின்றன.
இந்நூல் பாயிரம் நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்டது. குறள்
வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை
வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என
வெண்பாவின் வகைகள் யாவும் இந்நூலில் காணப்படுகின்றன. இந்த
நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.
விழுமியம் : நல்லொழுக்கம்

