வெள்ளி, 29 மார்ச், 2024

கலித்தொகை - நெய்தற் கலி - 119 – நல்லந்துவனார்

 


கலித்தொகை - நெய்தற் கலி - 119

பாடியவர் – நல்லந்துவனார்

 

v  விழுமியம் – பிரிவாற்றாமை

v  கூற்று விளக்கம் – தலைவனின் பிரிவைத் தாங்க இயலாத தலைவி, தோழிக்குக் கூறியது.

v  திணை – நெய்தல்

 

நல்லந்துவனார்

நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அந்துவன் என்னும் பெயரைக்கொண்டு இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம். 

இவர் பாடியனவாக 39 பாடல்கள் உள்ளன. அவை:

அகநானூறு 43 - பாடல் 1

கலித்தொகை, நெய்தல்-கலி, - பாடல் 33

நற்றிணை 88 - பாடல் 1

பரிபாடல் 6 வையை, 8 செவ்வேள், 11 வையை, 20 வையை, - பாடல் 4

இவர் செவ்வேள்மீது பாடிய பரிபாடலை மதுரை மருதன் இளநாகன் என்னும் புலவர் அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். (அகநானூறு - 59)

இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல் - விளக்கங்கள் இன்று பலராலும் எடுத்தாளப்படுகின்றன. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் உள்ள பொருள் - சொற்றொடர்கள் வியப்பைத் தருகின்றன. அசுணமா, மகன்றில் ஆகிய விலங்குகளுக்கு இவரது பாடல்கள் விளக்கமாக அமைந்துள்ளன. இவர் கூறும் மெய்யுரைகள் ஆழமானவை. பழக்கவழக்கங்கள் தமிழரின் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். உவமைகள் புதுமையானவை. சேரரின் கால்வழியைச் சேர்ந்த இவர் பாண்டியனைப் புகழும் பாங்கு இவரது நடுவுநிலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டு. புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார். 

சொல் விளக்கம்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சிந்து முதல் பொருநை வரை - சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு

 

சிந்து முதல் பொருநை வரை



09.02.2024 ன்று கோவை மாவட்டம் பேரூர் - தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் நிகழ்ந்த சிந்து முதல் பொருநை வரை எனும் மாநில அளவிளான தொல்லியல் கருத்தரங்கில் சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு (இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி கள ஆய்வை முன்வைத்து)

எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.

நான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி ஆகிய மூன்று ஊர்களிலும் மேற்பரப்புக் கள ஆய்வு சேகரித்த தொல்பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தேன். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி மாணவர்களும் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களும் அரசுக் கல்லூரி மாணவர்களும் கண்டு களித்தார்கள்.  சிந்துவெளிப் பண்பாட்டை முன்னெடுக்கும் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களும், கீழடியை உலகறிய செய்த திரு கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா ஐயா அவர்களும், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் அ.கருணானந்தன் ஐயா அவர்களும், பேரூர் மடத்தின் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் மேற்கு மண்டல அமைப்பாளர்  பேராசிரியர் முனைவர் த.திலீப்குமார்  அவர்களும், தோழர் ரமணி அவர்களும் பார்த்து மகிழ்ந்து பாராட்டியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் எனக்குப் பெரும் துணையாக இருந்த எனது மனைவி முனைவர் பா.கவிதா அவர்களுக்கும் என் அன்பு மகன் இரா.க.தமிழ்ச்செழியனுக்கும் அந்தக் கல்லூரி மாணவர் நிர்மல் குமார் அவர்களுக்கும், போட்டோ எடுத்து உதவிய சஞசீவி மாணவருக்கும் மேலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும்  நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

அப்பொருள்களைப் பார்வையிட்ட போது என் மகனின் ஈடுபாட்டைப் பார்த்து அருகில் அழைத்து இரா.க.தமிழ்ச்செழியனின் இரு தோள்களிலும் கைவைத்து புகைப்படம் எடுக்கச் சொன்ன ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் நான் சேகரித்த பொருட்களில் ஒருசில பொருட்


கள் முக்கியமானவை என்றும் இப்பொருள் வைகை நதிக்கரை ஓரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை பாதுகாத்துவையுங்கள் எழுதுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்திய  
கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா  ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல…

எங்களைப் புகைப்படம் எடுத்து நினைவலைகளில் தக்க வைத்த புகைப்பட கலைஞர், தொல்லியல் ஆர்வளர் நண்பர் ஜெயக்குமார்  அவர்களுக்கு நன்றி.








 
நன்றி.



புதன், 31 ஜனவரி, 2024

ஐங்குறுநூறு

 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி - கபிலர் (100), முல்லை - பேயனார் (100), மருதம் - ஓரம்போகியார் (100), நெய்தல் - அம்மூவனார் (100), பாலை - ஓதலாந்தையார் (100) என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. அப்புலவர்கள் யார் யார் என்பது பற்றித் தெரிந்துகொள்ள வெண்பா ஒன்று உதவுகிறது. அவை பின்வருமாறு:

மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்

கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே

நூலையோ தைங்குறு நூறு.

என்பதாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன். ஐங்குறுநூறு ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடிகளைக் கொண்ட காரணத்தால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். 

v  ஐங்குறுநூற்றில் ஐந்து திணைகைளையும் பாடிய புலவர் குறித்த குறிப்புகள் பின்வருமாறு

ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.

இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 09, புறத்திணை 01. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.

அகநானூறு

 


அகநானூறு

 


எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது. களிற்றியானை நிரை (1-120), மணிமிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்தில் அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது. 

அகநானூறு - 262

திணை      : குறிஞ்சி.

பாடியவர்   : பரணர்

விழுமியம்   : குற்றமும் தண்டனையும்

கூற்று       : இரவுக்குறி வந்து தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சுக்குச்

  சொல்லியது.

கூற்று விளக்கம்: இரவுக்குறியி வந்து தலைவியின் நலனை நுகர்ந்து மீளுகின்ற தலைவன் புணர்ச்சி இன்பத்தால் பெரிதும் மகிழ்ந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது

 

முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,

பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,

இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,

பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,

 

வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,      5

ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,

 

கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,

சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,

மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,

செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10

இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய

அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,

 

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்

நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15

வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்

கொண்டல் மா மலை நாறி,

அம் தீம் கிளவி வந்தமாறே.  (பரணர் - 262)

அன்னி மிஞிலி என்பவளின் தந்தை வயலை உழுதபின் உழுத எருதுகளை மேய விட்டிருந்தான். உழுத களைப்பால் அவன் சற்றே அயர்ந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் மாடுகள் அருகிலிருந்த பசுமையான வரகுப் பயிர்களை மேய்ந்துவிட்டன. வயல்காரன் ஊர் முது கோசர்களிடம் முறையிட்டான். ஊர் முது கோசர் அன்னி மிஞிலியின் தந்தையை நன்றாக அடித்தனர். அத்துடன் விடாமல், மாடுகள் மேயப் பார்த்துக்கொண்டிருந்தான் எனத் தீர்மானித்து, அவனது இரண்டு கண்களையும் தோண்டிவிட்டனர். தந்தைக்கு இழைத்த கொடுமையைத் தாங்கமுடியாமல் பழி தீர்க்க நினைத்த மகள், குறும்பியனிடம் முறையிட்டாள். குறும்பியன் தன் படைத்தலைவன் திதியனை அனுப்பிக் கோசர் கொட்டத்தை அடக்கினான். அந்த நிகழ்வு அன்னி மிஞிலிக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. அப்படிப்பட்ட பெருமகிழ்ச்சி இரவுக்குறியின்கண் தலைவியின் நலனை நுகர்ந்த தலைவனுக்கு இருந்ததாக தன் நெஞ்சிற்குச் சொல்லுகிறான். 

அகநானூறு - 04

திணை      : முல்லை.

பாடியவர்   : குறுங்குடி மருதனார்

விழுமியம்   : மனிதநேயம்

கூற்று       : தோழி தலைமகளைப் பருவம்காட்டி வற்புறுத்தியது.

கூற்று விளக்கம்: வினைவயில் பிரிந்த தலைவன், நான் கார்ப்பருவத் தொடக்கத்தில் மீண்டு வருவேன்.துவரை எனக்காக ற்றிருக்க எனக் கூறிச்சென்றான். தலைவி தலைவனது பிரிவைத் தாங்க முடியாமல் பெரிதும் வருந்தினாள். அது கண்ட தோழி தலைவன் குறித்துச் சொன்ன கார்ப்பருவத்து வரவினைத் தலைவிக்கு எடுத்துக்காட்டி நம் தலைவன் ன்றே வருவான். நீ வருந்தாதே எனக் கூறித் தலைவியை ஆறால் கூறுகிறாள்.


முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு

பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,

இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,

பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,

மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,            5

கருவி வானம் கதழ் உறை சிதறி,

கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.

 

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த    10

தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,

மணி நா யாத்த மாண் வினைத் தேரன்,

 

கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்  15

போது அவிழ் அலரின் நாறும்

ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

முல்லைக் கொடியில் கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்ற, தேற்றாமரத்துடன், பசிய காம்புகளைக் கொண்ட கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் அழகு பெற்றுத் திகழ்கிறது.

 

தலைவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான். அரி அரியாகப் பூத்து உதிரும் நிலையில் இருக்கும் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாகத்  தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்க அவ்வாறு அவன் மணிநாக்கைக் கட்டிவைத்திருக்கிறான். அவ்வாறு வண்டினங்கள்கூடக்  கலக்கமடைவதைப் பொறுக்காத உன் தலைவன், நீ கலக்கமடைவதைப் பொறுப்பானோ? மாட்டான். இதோ, விரைவில் விரைந்து வந்துவிடுவான்.

தேர்ந்தெடுத்த வளையல் அணியக்கூடிய தலைவியே! அரிவை பருவத்தை உடைய தலைவியே!, எப்போதும் விழாக்கோலமாக விளங்கும் உறையூருக்குக் கிழக்கில் உள்ள உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும் காந்தள் பூப் போன்ற மணம் வீசக்கூடிய மேனியை உடைய தலைவியே வருந்தாதே. 

அகநானூறு - 70

திணை      : நெய்தல்

பாடியவர்   : மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

விழுமியம்   : தொன்மைச் சிறப்பு

கூற்று       : தலைமகன் வரைவுக்கு (திருமணத்திற்கு) உடன்பட்டமையைத் தோழி   

  தலைமகளுக்குச் சொல்லியது

கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து செல்லும் கருத்தின்றிக் களவு ஒழுக்கமே காமுற்று ஒழுகினான். அலர் மிகுந்த காரணத்தினாலும் தோழி வரைவு கடாவியதாலும் வரைவு உடன்பட்டவனாய்த் தலைவியை மணந்து செல்ல வருகின்றமை அறிந்து தோழி அவ்வின்னப் செய்தியைத் தலைவிக்குக் கூறி மகிழ்வித்தது.

 

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,

கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்

 

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே    5

அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,

பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே

 

வதுவை கூடிய பின்றை, புதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்      10

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

வளைந்த திமில் படகில் சென்ற பரதவருக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்களது சிறுகுடியில் மீன்-புலவு நாற்றும் பெரிதாக வீசிற்று. குறுகிய கண்ணை உடைய தம் வலையின் பயனை அவர்கள் பெரிதும் பாராட்டினர். தமக்குக் கிடைத்த அயிலை மீனை அவர்கள் தம் பாக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தனர். - இப்படிப்பட்ட மீன்துறையை உடையவன் தலைவன்.

அவன் நம்மோடு இருந்த உறவு பற்றி அலர் தூற்றும் வாயை உடைய ஊர்ப் பெண்டிர் கமுக்கமாகப் பேசிக்கொள்கின்றனர். (அம்பல் தூற்றுகின்றனர்). இது முன்பு இருந்த நிலை.

இனி, திருமணம் நடந்த பின்னர் என்ன செய்வார்கள்? வாய் அவிந்து (வாய் மூடி) போவார்கள். எப்படி வாய் அவிந்து போவார்கள்? தொன் முது கோடியில் (தனுஷ்கோடியில்) அதாவது பாண்டியர்களுக்குரிய சேதுக்கரையில் அமர்ந்து ஸ்ரீராமன் இலங்கை மீது படையெடுப்பது குறித்த போர் யூகங்களைத் தன் வானர சேனைகளுடன் ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒலி செய்து தொந்திரவு செய்த பறவைகளைத் தம் கை ஒலி செய்து அமைதிப்படுத்தினான். அதைப் போன்ற ஆலமரத்தடியில் இருந்தவர்கள் எல்லாரும் வாயவிந்து போனார்கள். அதுபோல அலர் தூற்றும் மகளிரின் வாய் அவிந்து போகும்.