ஞாயிறு, 22 மார்ச், 2026

புறநானூறு (பாடல் - 18, 74, 86)

 

புறநானூறு

(பாடல் - 18, 74, 86) 

புறநானூறு-18

நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழந் தமிழ் நூல் தொல்காப்பியமாகும். இத்தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளாதிகாரம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. இப்பகுதிகள் தமிழ் மக்களின் வாழ்க்கை இலக்கணத்தைக் கூறுகிறது. அந்த வாழ்க்கையினை அக வாழ்க்கை என்றும்; புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்து இலக்கணம் கூறுகிறது. அக வாழ்க்கை - காதல் வாழ்க்கையினை அதாவது இல்லறி வாழ்க்கையினைக் கூறுவது. புற வாழ்க்கை - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவற்றைக் கூறுவது. புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நானூறு செய்யுள்களைக் கொண்டமைந்தது புறநானூறு என்னும் நூலாகும். இந்நூலுள் - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவை கூறப்பெற்றுள்ளன. புறநானூறு - 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வந்துள்ளது. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

குடபுலவியனார்

குடபுலவியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குடபுலம் நாட்டுப்பகுதியிலிருந்து வந்தவர் ஆகையால் இவரைக் குடபுலவியனார் என்றனர்.  குடபுலம் என்பது சேரநாட்டைக் குறிக்கும். இந்தப் புலவர் சேரநாட்டு புலவர் எனத்தெரிகிறது. இவரது பாடல்கள் இரண்டு (18, 19) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விரண்டு பாடல்களும் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றியவையாகும்.

விழுமியம் – நீர் வளம்

திணை - பொதுவியல்

 

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியல் ஞாலம்

தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ,

ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய

பெருமைத்தாக, நின் ஆயுள்தானே!

நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்

பூக் கதூஉம் இன வாளை,

நுண் ஆரல், பரு வரால்,

குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;

வான் உட்கும் வடி நீள் மதில்;

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி,

ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்

தகுதி கேள், இனி, மிகுதியாள!

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே;

வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன்

வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே; அதனால்,

அடு போர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்

தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.

(புறம்.18 – குடபுலவியனார்)

 

உரை:

ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க!

நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப் பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக!

நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது. ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர்.

விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்

புறநானூறு-74

சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் உண்ணாமல் மானம் கருதி வஞ்சினம் கூறி உயிர் விட்ட பாடல்.

விழுமியம் –தன் மானம்

திணை - பொதுவியல்

 

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,

'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;

தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,

மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,        5

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ, இவ் உலகத்தானே?”

(புறம்.74 – சேரமான் கணைக்கால் இரும்பொறை)

பிறந்த குழந்தை இறந்தாலும்,

உணவுப் பிண்டமாகக் குழந்தை பிறந்தாலும்

பிறந்த குழந்தை வீரம் உடைய குழந்தை என்று எண்ணி

தன் மார்பில் வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம்.

 

நானோ சங்கிலியால் கட்டிய நாய் போல்

இழுத்துக் கொண்டுவரப்பட்டேன்.

மேலும் நெஞ்சில் உரம் இல்லாமல்

என் வயிற்றுப்பசி அடங்க தண்ணீர் கேட்டு

உண்ணும் நிலைக்கு ஆளானேன்.

இந்த ஈன நிலையைப் பெறவேண்டுமா?

புறநானூறு-86

விழுமியம் – வீரம்

திணை - வாகை

 

சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்

யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;

புலி சேர்ந்து போகிய கல்அளை போல

5 ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!

(புறம்.86 – காவற் பெண்டு)

 

ஒரு நாள், ஒரு பெண் காவற் பெண்டுவின் வீட்டிற்கு வந்து, அவ் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு உன் மகன் எங்கு இருக்கிறான்” என வினவுகிறாள். அதற்கு காவற் பெண்டு என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. புலி வெளியேறியுள்ள கல்லுக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறுதான் இது. அவனைப் பார்க்க விரும்பினால் போர்க்களத்திற்குச் செல்லுங்கள். என் மகன் முன் வரிசையில் நின்றுகொண்டிருப்பான் என்று கூறுகிறார்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading