ஞாயிறு, 22 மார்ச், 2026

பரிபாடல் (வையை 7-ஆம் பாடல்)

 

பரிபாடல்

பரிபாடல் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிந்துசெல்லும் ஓசையையுடைய பரிபாட்டால் ஆயினமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இது திருமால், முருகன் மற்றும் வையை ஆறு, மதுரை நகரின் சிறப்பு, மற்றும் காதல் (அகம்) பற்றி பாடும் இசைப்பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் 70 பாடல்கள் இருந்ததை இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. அவற்றில் இன்று நமக்குக் கிடைத்திருப்பவை 22 பாடல்கள் மட்டுமே. அகமும் புறமும் கலந்த நூல் இது.

பரிபாடல் தொடர்பான பாடல்கள்

.எண்

தெய்வம்

பழம்பாடலின் எண்ணிக்கை

தற்பொழுது கிடைத்திருக்கும் எண்ணிக்கை

1

திருமால்

08 பாடல்கள்

06 பாடல்கள்

2

செவ்வேள் (முருகன்)

31 பாடல்கள்

08 பாடல்கள்

3

வையை

26 பாடல்கள்

08 பாடல்கள்                   

4

மதுரை

04 பாடல்கள்

---                  

5

காடுகாள் (காளி)

01 பாடல்

---         

 

மொத்தம்

70

22

 

விழுமியம் - புனலின் வனப்பு / நீர் விளையாட்டு

பண் - பாலை யாழ்

வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்

வையையில் வந்த புனலை மக்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொண்டனர் என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது. புனலாடிய ஆண்களும், பெண்களும் எப்படியெல்லாம் மகிழ்ந்தனர் என்று விளக்கும்போது ஊடல், கூடல் தொடர்பான செய்திகள் வருகின்றன. அவற்றுள் சில கடியத் தக்கனவாகவும் உள்ளன.

 

'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்

அவிழ்ந்த மலர் மீதுற்றென', ஒருசார்;

மாதர் மடநல்லார், மணலின் எழுதிய         25

 

பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;

'அகவயல் இள நெல் அரிகால் சூடு

தொகு புனல் பரந்தெ'னத் துடி பட, ஒருசார்;

'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;

'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்;     30

விளக்கம்

ஒருபக்கம் குளத்திலிருந்த கழுநீர்ப் பூக்கள் மூழ்கிப்போயின.

ஒருபக்கம் மணலில் வரைந்த ஓவியம் அழிந்துவிட்டதே

என்று மகளிர் அழுதனர்.

ஒருபக்கம் நெல்-கட்டுகளை அடித்துச் சென்றுவிட்டதே

என்று உழவர்கள் துடித்தனர்.

ஒருபக்கம் வெள்ளம் ஊரை வளைத்துக்கொண்டதே

என்று மழையை மக்கள் திட்டினர்.

 

'பாடுவார் பாக்கம் கொண்டென,

ஆடுவார் சேரி அடைந்தென,

கழனி வந்து கால் கோத்தென,

பழன வாளை பாளை உண்டென,

வித்து இடு புலம் மேடு ஆயிற்றென',         35

 

பாடுபவர் பாக்கத்துக்கு வந்தது போலவும்,

ஆடுபவர் தெருச்சேரிக்கு வந்தது போலவும்

வெள்ளம் ஊருக்குள்ளும், சேரிக்குள்ளும் புகுந்தது.

வயல்களில் வாய்க்காலாய் பாய்ந்தது.

வயலிலிருந்த வாளைமீன்கள்

தென்னம் பாளைகளை உண்ணும்படி வயலில் நீர் பெருகிற்று.

விதைக்கும் நிலங்கள் மணல்மேடுகளாக மாறின.

 

உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்

புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,

சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,

பழன உழவர், பாய் புனல் பரத்தந்து.

உணர்த்த உணராமல் ஊடிய பெண்ணை

வலுக்கட்டாயமாகத் தழுவுவது போல வெள்ளம் பாய்ந்தது.

அதனால் உழவர்கள் வயல்களில் வாளை மீன்களைப் பெற்றனர்.

வையைப் புனலின் வனப்பு

இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, 40

வரை புரை உருவின் நுரை பல சுமந்து,

பூ வேய்ந்து, பொழில் பரந்து;

துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,

அலர் தண் தாரவர், காதில்

தளிர் செரீஇ, கண்ணி பறித்து;        45

 

கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,

மேகலை, காஞ்சி, வாகுவலயம்,

எல்லாம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்

ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட

தானையான் வையை வனப்பு.        50

 

இரண்டு மலைகள் போல் இருந்த இரண்டு கரைகளுக்கிடையே நுரையாகிய பூக்களைப் பூத்துக்கொண்டு சோலைகளிலெல்லாம் பாய்ந்தது.

கண்டு மகிழ்ந்த மகளிர் கழுத்தில் மாலை சூடிக்கொண்டு ஆடினர்.

ஆடவர் தலையிலிருந்த கண்ணியைப் பறித்துக் காதில் பூவாகச் செருகிக்கொண்டு ஆடினர்.

கைவளையல், மோதிரம், மார்பை மூடும் தொய்யகம். உடுத்த ஆடை, மேலாடை-மேகலை, இடையணி காஞ்சி, தோளணி வாகுவலயம் முதலானவற்றையெல்லாம் கவரும் வகையில் தென்னவன் படை பகைநாட்டில் புகுந்தது போல வெள்ளம் புகுந்தது.

 

தோழி புனலணி இன்பம் கூறுதல்

 

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்

துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்

அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,

கை புதைஇய வளை

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்      55

 

போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு

பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்

செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;

வையைப் பெருக்கு வடிவு.            60

 

விரும்பத்தக்க கட்டழகன் ஒருவன்

அழகி ஒருத்தியின் கண்மலரில் நீரை எற்றித் தூவினான்.

அவள் தன் கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டாள்.

மற்றொருத்தி தன் கரும்பு போன்ற தோளால் அவனைச் சிறைபிடித்தாள்.

இன்னொருத்தி அவளது பிடியை விலக்குவதற்காகப் பாய்ந்தாள்.

இப்படிப் பல பெண்களின் கண்நிழல் பட்டு நீரே இருள்நிறம் கொண்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading