சனி, 21 மார்ச், 2026

தனிப்பாடல் - கவி காளமேகப் புலவர்

 


தனிப்பாடல்

கவி காளமேகப் புலவர்


தமிழ் மொழியில் சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த பல வகையான பாடல்கள் தோன்றியுள்ளன. ஒரே பாடல் இரு பொருள் தோன்றும்படி பாடப்படுவது இரட்டுறமொழிதல் எனப்படும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.

சிலேடை பாடுவதில் வல்லவரான காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ் புலவர். இவரது இயற்பெயர் வரதன். கார்மேகம் போல கவிபொழியும் ஆற்றல் பெற்றதால் இவரைக் காமேகப்புலவர் என அழைக்கப்பட்டார். மேலும் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்றெல்லாம் அழைப்பர்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்தி கிராமம் என்னும் ஊரில், வைணவ சமயத்தில் பிறந்தவர். பின்னாளில் சைவ மதத்திற்கு மாறினார். இவர் சைவ பாடல்கள் பாடுவதில் வல்லவர். இவருடைய படைப்புகள் திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, சமுத்திர விலாசம், சித்திர மடல் மற்றும் தனிச் செயல் திரட்டு போன்றவையாகும். வாச வயல் நந்தி வரதா திசைனைத்தும் வீசுகவி என அதிமதுர கவி இவரைப் போற்றியுள்ளார்.

இவர் காலத்தில்தான் தென்னாட்டை, சாளுவ மன்னன் திருமலைராயன் (1453-1468) ஆண்டு வந்தான் என்பது வரலாறு. இதற்குத் திருவானைக்காவில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. (ம் 1375).

விழுமியம்  - சிலேடை நயம்

வைக்கோலும் யானையும்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானை யாம். (3)

வைக்கோல்

வயலில் அறுவடை செய்யும் மக்கள் கதிர்களை வாரிக்கொணர்ந்து களத்து மேட்டில் அடிப்பர். அடிக்கப்படும் கதிரிலிருந்து நெல் பிரிந்துவைக்கோலாக உருமாறும். பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாகப் புகுத்தப்படும். வைக்கோல் போராக் குவிக்கப்பட்டு அழகாக காட்சிதரும்.

யானை

யானை பகைவர்களைத் துதிக்கையினாலே வாரிப் போர்க்களத்தில் அடித்துக் கொள்ளும். பின்பு பகையரசரின் கோட்டைக்குள் புகும். போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.

 

பாம்பும் எலுமிச்சம் பழமும்

 

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்

அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்

தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்

பாம்பும் எலுமிச்சம் பழம் (6)

 

பாம்பு

பாம்பு பெரிய அளவில் விசத்தைக் கொண்டிருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் தலையானது உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் குணம் உடையது.

 

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம் பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள் மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

நாயும் தேங்காயும்

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்

நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே

தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்

தேங்காயும் நாயுமெனச் செப்பு (9)

 

நாய்

நாய் சில நேரம் ஓடும். சில நேரம் இருக்கும். அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். வாலை ஆட்டிக் கொண்டு நம்மை நாடி வரும். வாலைக் குலைத்து வருவருவதற்கு வெட்கப்படாது.

 

தேங்காய்

தேங்காயின் ஓடு உருளை வடிவில் இருப்பதால் சில நேரம் ஓடும் சில நேரம் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.

 

குதிரையும் காவிரியாறும்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்

தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்

ஆடுபரி காவிரி யாமே. (15)

 

குதிரை

குதிரை வேகமாக ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். போரில் பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு

காவிரி ஆறு நீராய் பெருக்கெடுத்து ஓடும். ஓடும் நீரில் சுழி இருக்கும். நீர் சுத்தமாக இருக்கும். தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும். மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.

 

டும் கதவும்

செய்யுட் கிடைமறிக்குஞ் சேர்பலகை யிட்டுமுட்டும்

ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை

தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்

ஆடுங் கதவுநிக ராம் (17)

ஆடு

வயலில் கிடை மறிக்கக்கடும். சேர்த்துப் பலகை இட்டுக் கிடையில் மூடப்படும். ஐயம் இன்றிப் போரடிக்கும் களத்தின்மேல் தன் கால்களால் மிதித்துக் களத் தரையைக் கெட்டிப்படுத்தும்.

 

கதவு

வீட்டின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் மறித்துக்கொண்டிருக்கும். பலகைகள் சேர்க்கப்பட்டு முட்டு ஆணி வைக்கப்பட்டிருக்கும். ஐயமில்லாமல் இருக்க மேலே தாழ்ப்பாள் போடப்படும்.

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading