சனி, 20 ஜனவரி, 2024

முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்

               

                 முதுமொழிக்காஞ்சி

                                    மதுரைக் கூடலூர் கிழார்



மதுரைக் கூடலூர் கிழார் என்னும் புலவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப்பொருள்படும். நிலையாமை கருத்துகளை உணர்த்தி உலகியல் அனுபவத்தை எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர். பத்துப் பாடல்களைக் கொண்ட பதிக அமைப்பைக் கொண்டது. இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்" என்னும் அடியோடு தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது நூல் இது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை அடியால் உலக நீதிகளை எடுத்துரைக்கும் சிறப்பான நூல். 

மதுரைக் கூடலூர் கிழார்

கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்னர் வாழ்ந்த ஊராகவும் இருத்தல் வேண்டும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். கூடலூர்க் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவையாகும். 

முதுமொழிக்காஞ்சியில் இடம்பெற்றுள்ள பத்துப் பெயர்கள் பின்வருமாறு:

வியாழன், 18 ஜனவரி, 2024

சிறுபஞ்சமூலம் - காரியாசான், பதினெண் கீழ்க்கணக்கு நூல்

 

சிறுபஞ்சமூலம்

                    காரியாசான்



 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது சிறுபஞ்சமூலம். இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்களைக் கொண்டுள்ளது. சிலர் 97 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் கூறுவர். இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைகப் பதினைந்து இடங்களில்தான் உள்ளன. அவை, (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92).

நூல் பெயர்க்காரணம்

பஞ்சம் என்பதற்கு ஐந்து என்று பொருள், மூலம் என்பதற்கு வேர் என்று பொருள். கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சில் வேர் ஆகிய ஐநது வேர்களான மருந்து உடலட நோயைத் தீர்ப்பதுபோல, மனித மனதை மேம்படுத்தும் ஐந்து நீதிக் கருத்துகளை நான்கு வரிகளில் எடுத்துரைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூலின் சிறப்பினை,

சிறுவழு துணைவேர், சின்நெருஞ்சி மூலம்

சிறுமல்லி கண்டங் கத்தரிவேர் - நறிய

பெருமல்லி ஓரைந்தும் பேசுபல்நோய் தீர்க்கும்

அரிய சிறுபஞ்ச மூலம். 

எனும் பழம்பெரும் பாட்டால் அறியலாம்.

காரியாசான்

 சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர். இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான் என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு. ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பதை அறியலாம். இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் என்பது நினைவில் கொல்லத்தக்க செய்தியாகும்.

பாடல் - 04

கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்

இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்

ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை. 

படிக்காத ஒருவன் ஆராய்ந்து கூறும் கருத்து நுண்மைத் தன்மை உடையது என்று கூறுவதையும், காதிரண்டும் இல்லாதாதால் அழகுடையேன் என நினைத்துக் கூறுவதையும், பொருள் இல்லாதவன் இல்லாதவற்கு ஈய்வது அறியான் என்று கூறுவதையும், ஒருவன் தன்னிடம் இல்லாத பொருளைக் கொடுப்பேன் என்று கூறுவதையும் அறிவுடைய நல்லவர் கேட்டால் சிறிப்பார்கள்.

திரிகடுகம் நல்லாதனார்

 

திரிகடுகம்

நல்லாதனார்



 

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமை நோயைப் போக்கி, வாழ்க்கைச் செம்மைபெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாதனார்

நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்ற உயிர் மருத்துவ நூலை இயற்றியவர். ஆதனார் என்பது இவரது இயற்பெயர். ‘நல்என்பது அடைமொழி. கடவுள் வாழ்த்துப் பாடலில், பூவை வண்ணன், திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சக்கரம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்று அறியமுடிகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

வியாழன், 11 ஜனவரி, 2024

ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

 


ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை

    ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல். ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் நீதி நூல் ஆகும். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர். வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, எனப் பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். இந்நூலில் சிறப்புப் பாயிரம் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு பாடலும் அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் செய்திள் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இந்நூல் வடமொழி கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பதை,

     ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்

     யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை

     ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்

எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது.    

பெருவாயின் முள்ளியார்

இந்நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு தெறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயராக இருக்கலாம். கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் இருக்கராம். அங்கு வாழ்ந்த காரணத்தால் பெருவாயின் முள்ளியார் என அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தாவராக இருக்கலாம்.

பாடல் 9 : காலை மாலைக் கடன் (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

 

நாளந்தி கோல்தின்று கண்கழிஇத் தெய்வத்தைத்

தானறியுமாற்றால் தொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.

விளக்கம்:

அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, இறைவனைத் தனக்குத் தெரிந்த வகையில் வணங்கித் தன் கடமைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். மாலையில் மீண்டும் அமர்ந்து இறைவனை வணங்க வேண்டும். வணங்கும் போது நின்று வணங்கக் கூடாது.

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

சீறாப்புராணம் - கள்வரை நதிமறித்த படலம் (எளிய உரை)

 

சீறாப்புராணம் -    உமறுப்புலவர் 



தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு இசுலாமிய காவியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர். அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதி மற்றும் அபுல்காசிம் ஆகிய வள்ளல்களின் ஆதரவை உமறுப்புலவர் பெற்றிருந்தார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற சொற்றொடர் விளக்கும்.

இதன் ஆசிரியரான உமறுப்புலவர், இந்நூலை முழுவதும் எழுதி முடிப்பதற்கு முன்பே இயற்கை எய்திய காரணத்தால், இதன் தொடர்ச்சியாக சின்னசீறா என்னும் நூலினை பனி அகமது மரைக்காயர் படைத்துள்ளார். இந்நூல் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன. முதற்பாகத்தில் 45 படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47 படலங்களும் (45+47=92) இடம்பெற்றுள்ளன. இந்நூலில் 5027 பாடல்கள் அமைந்துள்ளன.

உமறுப்புலவர்

உமறுப்புலவர்தூத்துக்குடிமாவட்டம், நாகலாபுரத்தைச்சேர்ந்தவர்.இவர் 4 திசம்பர் 1642 பிறந்து 28 சூலை 1703 ஆண்டு மறைந்தார். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்பபூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரிடம் உமறுப்புலவர் தமிழ் பயின்று புலமைபெற்றவர். தம் ஆசானுக்குப்பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். ஆண்டு தோறும் இவரது பிறந்த நாளை அரசு விழாவாக மாவட்ட அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கொண்டாட 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின்படியே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணத்தின் 3 வது காண்டம்  நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார்.உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.

கள்வரை நதிமறித்த படலம்

(எளிய உரை)

841. பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ
    ரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து
    முருகு லாவிய பொழில்கடந் தருநெறி முன்னித்

    திருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே. (1)

வட்ட வடிவை  உடைய சூரியன் தன் செந்நிறக் கதிர்களை எல்லா இடமும் பரப்பிட தூக்கத்திலிருந்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களும் மற்ற வியாபாரிகளும் எழுந்து எருதுகளையும் ஓடாமல் நிற்கும் குதிரைகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு வாசனையுடைய அந்தச் சோலையை விட்டுத் தாண்டி அரிதாகிய பாதையை அடுத்துச் செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது கோபத்தை உடைய யானையைப் போல ஒருவர்க்கொருவர் நெருங்கி நடந்து சென்றார்கள்.