ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

 

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.


      இருபதாம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சிச் சிந்தனைகள்தான் வரலாற்றைப் புதிய நோக்கில் ஆராய முற்பட்டன. பழையசிந்தனைகள் வரலாற்றை நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவும், மன்னர்களின் பட்டியலாகவும் பார்த்தன.

 

      ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்போது? யார்? யாரால்? யாரை? போன்ற வினாக்களைத் தொடுக்கும்போது விடை மட்டுமல்லாது வரலாறும் பிறக்கும். அந்த வகையில் இவ்வினாக்களுக்கான விடைகளை அடிப்படைச் சான்றுகளாக வைத்துக்கொண்டு வரலாற்றினை விளக்க முற்படும் போது திறனாய்வாளர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுவது மட்டுமல்லாமல் வலிமை சேர்க்கும் சான்றுகளாகவும் அமைகின்றன.

 

      வரலாறு என்பது முடியுடை மூவேந்தரின் சிறப்பினையும் அவர்தம் ஆட்சியின் மாட்சியினையும் மட்டும் பகர்வது அன்று. மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்தியம்புவது என்கிறார் தி.இராசகோபாலன். (க.பொன்னுச்சாமி, திறனாய்வுரை, முதற்பக்கம்).

      இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நினைவுகூர்ந்து எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு வரலாற்றிற் குரியது என்கிறார் ச.சிவகாமி (1994:4).

 

      ஓர் இனமக்களின் வரலாறு என்பது போர்க்களத்தோடும் அதனில் நின்று கொண்டு இருந்த மன்னர்களின் புயபல பராக்கிரமத்தோடும் ஒடுங்கி முடிந்துவிடுவதில்லை. மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலத்தையும் பண்பு நலத்தையும் அவர்கள் காலத்து மற்றத் துறையினரின் நடவடிக்கைகளையும் ஒருங்கே சொல்வதுதான் வரலாறு என்கிறார் சாலை இளந்திரையன் (XVI).

 

      மனிதக் கூட்டம் சென்ற காலம், இடைக்காலம், இன்றைய காலத்தில் தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்து வாழ்ந்த, வாழ்கின்ற முறைமையினைச் சரியானபடி தருகின்ற ஒரு பயில்நெறி (Discipline) வரலாறு என்கிறார் சி.மெளனகுரு (2010:130).

 

      வரலாறு என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைத் தொகுத்து உரைப்பது அன்று; கடந்தகால நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உரிய தொலைநோக்கியேயாகும் என்று எஸ்.இராதாகிருட்டிணன் அவர்களின் கருத்தினை மேற்கோள் காட்டுகிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மக்களினம் நினைவுக்கு எட்டாத தொல்பழங்காலத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பயணத்தில் இன்றுவரை அடைந்துள்ள வெற்றி, தோல்விகளையும், பெருமை சிறுமைகளையும் வாழ்வு தாழ்வுகளையும் இன்ப துன்பங்களையும் ஏமாற்றங்களையும் சுவையோடு முறையாகக் கூறும் தொடர்கதையே வரலாறுஎன்பர் க.த.திருநாவுக்கரசு (1962:9).

      மனிதன் காட்டில் திரிந்து காய், கனி முதலியன தின்று விலங்குகளிடையே வாழ்ந்து வந்த காலம் முதற்கொண்டு, சமுதாய அறிவைப்பெருக்கிக் கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் உயர்ந்த நாகரிகத்தை அடைந்த காலம் வரை அவர் பெற்ற அனுபவக் கருவூலமாக விளங்குவதே வரலாறு என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:9).

 

      மேலும் தனி மனிதன் பிற மக்களோடு கொண்ட தொடர்பினையும் ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வேற்று இனமக்களோடு கொண்ட உறவையும் அவர்கள் தங்களுக்குள் விட்டுக்கொடுத்துப் பொறுமையுடன் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொண்டதையும் எடுத்து இயம்புவதே வரலாறு என்கிறார் (1962:10).

 

      மக்களின் வாழ்க்கை கடந்த காலத்தில் எப்படி இருந்தது? என்பதை விளக்க முயலுவதே வரலாறு உலகில் உள்ள கலைகள் அனைத்தையும் ஈன்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்த பெருமை வரலாற்றிற்கு உரித்தாகும். இக்காரணத்தினால்தான் அறிவியலின் அன்னை என்று வரலாற்றை அறிஞர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:10).

 

வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பிலவேந்திரன் (ப.5).

 

      வரலாறு என்பது அறநூலும் அறிவியல் நூலும் மட்டுமன்றி ஒரு கலைப்படைப்புந்தான் என்கிறார் சொ.ஞானசம்பந்தன் (2002:81).

 

      வரலாறு என்பது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற அப்பட்டமான உண்மை நிகழ்ச்சிகளை மட்டுமே எடுத்துக்கூறி மக்களின் அறிவுக்கு மட்டுமே விருந்தளிக்கும் என்பர் தி.இராசகோபாலன் (கே.ஆர்.ஹனுமந்தன் - மதிப்புரை), ப.2

      வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் கூறுவதன்று. இன்றைய செய்திகள் கூட நாளைய வரலாறாக மாறிவிடும். கடந்தகாலச் செய்திகள் நிகழ்காலத்தில் நிரல்படுத்தப் பெற்று வருங்காலத்திற்கு இலட்சிய வாழ்க்கையை எடுத்தியம்புவதாக வரலாறு இருத்தல் வேண்டும் என்கிறார் இரா.பாலசுப்பிரமணியன் (ப.9).

 

      வரலாறு செய்தித் தொகுப்பன்று. சமுதாய மாற்றங்களின் திசைவழியை அறிய உதவும் விஞ்ஞானம் என்கிறார் நா.வானமாமலை. (ப.5).

 

      சமூக உருவங்களின் பரிணாமத்தையும் சமூகம் அமைக்கப்பட்டிருந்த விதத்தையும் மாறாமல் நிலைத்திருந்த பண்பாட்டுக் கூறுகளின் அளவையும் சமூக மாறுதல்கள் நிகழ்ந்த போது அவற்றின் தன்மைகள் எவை என்பதையும் ஆராய்ந்து நாம் மறுமதிப்பீடு செய்வது அவசியமாகும். இம்மதிப்பீட்டுக்கு வரலாற்றுச் சான்றுகள் மிக முக்கியமான காரணமாக அமைகிறது.

 

      வரலாறு என்பது கால ரீதியான நிகழ்வுகளின் தொகுப்பு என்று ஒற்றைப் பரிமாணமுறையில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இது மட்டும் வரலாறு அல்ல. ஓர் இனம் எவ்வாறு காலங்காலமாக உருவாகிப் பரிணமித்து வந்திருக்கிறது என்பதையும் அப்பரிணாம வளர்ச்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள என்னென்ன காரணங்களை, செயல்பாடுகளை அவ்வினம் மேற்கொண்டதோ அவற்றையும் வரலாறு என்று நாம் புரிந்துகொள்கிறோம் என்கிறார் சே.ச.மாற்கு (2004:ப.38).

 

      உலகில் அநேகமாக எல்லாச் சமூகங்களிலும் மதம், கடவுள், ஆன்மா, கோவில், வழிபாடு, புரோகிதம், சடங்குகள் முதலியவை இல்லாமல் இல்லை. பல்வேறு வரலாற்றுச் சூழலில் இவை தோன்றுகின்றன. அல்லது தோற்றுவிக்கப்படுகின்றன. உயிர்கள் எப்படித் தோன்றின, சூரியன், சந்திரன், இயற்கைப் படிவ மாற்றங்கள் எவ்வாறு இயங்குகின்றன, மனிதப் பிறப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்ற இக்கேள்விகள் மனிதர்களுக்குக் கிடைத்த அறிவு வெளிச்சம். ஆனால் இதற்கான விடைகள் ஒரே மாதிரியாக இருப்பது சாத்தியமில்லை. வரலாற்றில் அனுபவங்கள் சேரும் பொழுது மாறுபட்ட விடைகள் முரண்பட்ட விளக்கங்கள் ஆகியவையும் எழுகின்றன. தனிவுடைமை, அரசதிகாரம், வர்க்கப்பிரிவுகள் ஆகியவை தம் தேவைகளுக்கு ஒத்த முறையில் இவற்றைத் தமக்கேற்ற வகையில் திரிபுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, வரலாறு என்பது மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்படுவதால் இதனைத் தனியொரு பயில்துறையாகவே வளர்த்தெடுக்க வேண்டும் என்பர் கா.சிவத்தம்பி.

 

      வரலாறு என்னும் ஆய்வுத்துறையில் அவ்வரலாற்றினை எழுதுவதற்கு அடித்தளமாக அமையும் நோக்கங்கள், மனப்பாங்குகள், ஆய்வுமுறைகள், அணுகுமுறைகள் என்பனவற்றை, அதாவது வரலாறு எழுதப்படும் முறையை, ஆராய்வதே தனியொரு பயில்துறையாக வளர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் அதனை ஹிஸ்ற்றோறியோகிறாஃபி (Historiography) என்பர் (2008:VIII).

 

      வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்கால மற்றும் எதிர்கால நோக்கம் உண்டு (2004:180). இந்த நோக்கங்களை உள்ளடக்கி வரலாற்றை அவர்கள் கட்டமைக்கிறார்கள். தொல்லியல் சான்றுகள், கல்வெட்டு ஆவணங்கள், ஓலைச் சுவடிகள், இலக்கியங்கள், பயணிகளின் குறிப்புகள் போன்ற வற்றிலிருந்து கிடைத்த ஆதாரங்களைத் தம் நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் பொருள்படுத்துகிறார்கள் அல்லது வரலாற்றைக் கட்டமைக்கிறார்கள்.


      தமிழர் வரலாறு குறித்து வெளிநாட்டவர் சிலரும் ஆராய்ந்துள்ளனர். கல்வெட்டு ஆய்வறிஞர்கள் சிலரும் தொல்லியல் ஆய்வாளர்கள் சிலரும் விடாமுயற்சியாகத் தம் ஆய்வுகளைத் தொடருகின்றனர். தமிழ் மக்களிடம் இடம்பெற்று வருகின்ற மரபுகள் குறித்தும் பழக்கவழக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றார் தொ.பரமசிவம்.



வெள்ளி, 30 ஜூலை, 2021

வரலாறு எனும் சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் தரும் விளக்கம்

 

வரலாறு எனும் சொல்லுக்கு 

ஆங்கில அகராதிகள் தரும் விளக்கம்

       முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.

      வரலாறு எனும் சொல்லுக்கு சங்கதி, ஒன்றுக் கொன்று தொடர்புடைய, விவரம், மூலம், இலக்கணம் அல்லது அறிவியல் ரீதியான வார்த்தைகளைப் பயன் படுத்துதல், பெருளடக்கப் பட்டியல், உள்ளதை உள்ளபடி கூறுதல் எனப் பல பொருள் தருகின்றது தமிழ் - ஆங்கிலம் அகராதி (1995:918).

 

      ஆக்ஸ்போர்டு ஆங்கிலஃரெப்ரன்ஸ் அகராதி வரலாறு எனும் சொல்லுககு முக்கியமான சமூக நிகழ்வுகளை, அவை நடந்த ஆரம்பகாலகட்டம் முதல் இறுதிக் காலகட்டம் வரைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வதாகும் என்று பொருள் தருகின்றது (P.669).

 

      வரலாறு எனும் சொல்லுக்கு 1.ஆதிகாலம், நடைபெற்ற நாட்கள், பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், முந்தைய நாட்கள், இறந்த காலம், 2,வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள், ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள குறிப்புகள், வாய்மொழி வரலாறு, பதிவுகள் என்று பொருள் தருகின்றது புதிய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி (P.424).

 

      ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையை அதன் முந்தையகால நிகழ்வுகளுடன் கணக்கிட்டுப் பதிவுசெய்தல் வரலாறு என்கிறது லிப்கோ அகராதி (P.451).

 

      சரித்திரம், வர்த்தமானம், வரலாறு, இதிகாசம், விவரணம் என வரலாறுக்குப் பல பொருள் தருகின்றது பெர்சிவல்ஸ் தமிழ் அகராதி (P.196).

 

      வழித்தடம், வழிமுறை, வரிசைப்படுத்துதல், திட்டமிடுதல், பரம்பரை எனப் பல பொருள்தருகின்றது தமிழ் - ஆங்கிலம் அகராதி (1963:630).

 

            மேற்குறித்த ஆங்கில அகராதிகள் வரலாறு எனும் சொல்லுக்கு சங்கதி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, விவரம், மூலம், இலக்கணம் அல்லது அறிவயல் ரீதியான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பொருளடக்கப் பட்டியல், உள்ளதை உள்ளபடி கூறுதல், முக்கியமான சமூக நிகழ்வுகளை அவை நடந்த ஆரம்ப காலகட்டம் முதல் இறுதிக் காலகட்டம் வரைத் தொடர்ச்சியாக பதிவுசெய்தல், ஆதிகாலம், நடைபெற்ற நாட்கள், பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், முந்தைய நாட்கள், இறந்தகாலம், வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள், ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள குறிப்புகள், வாய்மொழி வரலாறு, பதிவுகள், முந்தைய நிகழ்வுகளைப் பதிவுசெய்தல், சரித்திரம், வர்த்தமானம், வரலாறு, இதிகாசம், விவரணம், வழித்தடம், வழிமுறை, வரிசைப்படுத்துதல், திட்டமிடல், பரம்பரை என்றெல்லாம் பொருள் தருகின்றன.




திங்கள், 26 ஜூலை, 2021

வரலாறு : விளக்கமும் பதிவுப் பின்புலமும்

 

 

வரலாறு : விளக்கமும்

பதிவுப் பின்புலமும்


  முனைவர் ந.இராஜேந்திரன்

     மொழித்துறை

       இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

     கோயம்புத்தூர் - 28.

 

      மனித இனமம் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை அவரவர் வந்த வழியினை, அடையாளத்தினை, இருப்பினை, பின்புலத்தினை அறிவது வரலாறு. இவ்வரலாறு ஏட்டில் உருப்பெறத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களையும் மரபுகளையும் கடந்து வந்துள்ளது. இத்தகு வரலாறு குறித்து அறிஞர் பெருமக்கள் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர். இவ்வரலாற்றைச் சங்கப் புலவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்ததற்கான பின்புலத்தினை எடுத்துரைக்கும் முகமாக இவ்வியல் அமைகின்றது.

 வரலாறு : விளக்கம்

      முன்நிகழ்ந்த நிகழ்வுகளைக் கோவைப்பட அமைத்து அவற்றின் தன்மையையும் அவற்றை நிகழ்த்தியவரின் தன்மையையும் ஆராய்ந்து மதிப்பிட்டு அந்நிகழ்ச்சிகளுக்கு இடையே காணக்கூடிய காரணகாரியத் தொடர்பை எடுத்து விளக்கிக் கற்போர் களிப்பும் பயனும் எய்துமாறு பதிவுசெய்யப்பெறுவது வரலாறு. இவ்வரலாறு Historia என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். சட்டத்துறை பற்றிய பூசலில் சான்றுகளை ஆய்வு செய்வதை ஹோமர் (Homer) வரலாறு என்னும் தொடரால் குறிப்பிட்டார். என்பர் ஆர்.திருஞானசம்பந்தம் (ப.3).

வரலாறு : தமிழ் அகராதிகள், களஞ்சியங்கள் தரும் விளக்கம்

      இன்று நிகழ்ந்து நாளைய வரலாறாக உருப்பெறும் ஒரு நிகழ்விற்கு அகராதிகள் பல விளக்கங்கள் தந்துள்ளன. வரலாறு எனும் சொல்லுக்கு யாழ்ப்பாணர் அகராதி ஒழுங்கு, மூலம் எனப் பொருள் தந்துள்ளது (2008:409).

      நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் ஒழுங்கு, மூலம்என வரலாறுக்குப் பொருள் தருகின்றது (1984:1238).

       ஒழுங்கு, மூலம் என இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதியும் (1918:301). சங்கதி, மூலம் எனப் பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியும் (2003:409). (Order of events) நிகழ்ச்சிமுறை, (History) சரித்திரம், (Antecedents) பூர்வ சரித்திரம், (Circumstances) சங்கதி, Details) விவரம், (Meansdevice) உபாயம் என்று (Tamil Lexicon) தமிழ் லெக்சிகன் (P.3511). வரலாற்றுகக்குப் பல பொருள்களைத் தருகின்றன.

      ஒழுங்கு, மூலம், உபாயம், உதாரணம், வமிசாவழி, வரலாற்று முறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு என வரலாறுக்குப் பல  பொருள்களைத் தருகின்றது மதுரைத் தமிழ்ப் பெயரகராதி (2004:528).

சரித்திரம் எனப் பொருள் தருகின்றது செந்தமிழ் அகராதி (1957:662).

நிகழ்ச்சி முறை, சரித்திரம், பூர்வ சரித்திரம், சங்கதி, விபரம், உபாயம், உதாரணம் என வரலாறுக்குப் பல பொருள்களைச் சுட்டுகின்றது தமிழ்ப் பேரகராதி (1982:3511). கதை, விவரம், சரித்திரம், வருதலின் வழி வரலாறு என்கிறது கோனார் தமிழ் அகராதி (2004:562).

      வரலாறு எனும் சொல்லுக்குச் சரித்திரம் (History) பண்டைய வரலாறு (arncient history) இடைக்கால வரலாறு (medium history), வாழ்க்கை வரலாறு (biography), தன்வாழ்க்கை வரலாறு (autobiography), வரலாறு காணாக் கூட்டம் (unprecedented crowd) என்கிறது மாணவர் மொழியாக்க அகராதி (2002:380).

      ஒரு நாட்டின் அல்லது உலகத்தின் அரசியல் சமூக பொருளாதாரத்துறைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவற்றின் காரணங்களையும் விளைவுகளையும் கால அடிப்படையில் அறியும் படிப்பு சரித்திரம் என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (1999:900-901).

       சரித்திரம் என்று பொருள் தருகிறது நர்மதாவின் தமிழ் அகராதி (2002:577). சரித்திரம், முன்வரலாறு, நிகழ்ச்சிமுறை, செய்தி, விவரம், ஒழுங்கு, வழிவகை, எடுத்துக்காட்டு என வரலாறு எனும் சொல்லுக்குப் பலப் பொருள்களைத் தருகின்றது மெய்யப்பன் தமிழ் அகராதி (2006:1036).

கெளரா தமிழ் அகராதி, ஒழுங்கு, மூலம், சரித்திரம் என வரலாறுக்குப் பல பொருள் தருகின்றது (2006:604). 

      இக்காலத்தில் வரலாறு என்னும் சொல் மனிதர்கள் தங்கள் சமூக வாழ்க்கையில் நாளடைவில் நடத்திவந்த எல்லாக் காரியங்களையும் குறிக்கும். முன்போல் இன்றும் வரலாற்று நூல்களில் அரச பரம்பரைகளும் அவைகளுக்குள் ஏற்பட்ட போராட்டங்களும் மிக விரிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும் அம்மட்டிலும் வரலாறு அடங்கிவிடாது. உற்று நோக்கினால் வரலாற்றில் அடங்கும் விடயங்களுக்கு எல்லையேயில்லை. மனிதர்கள் செய்துவந்த ஒவ்வொரு செயலும் மனத்தால் கருதிய ஒவ்வோர் எண்ணமும்கூட, நாம் அவற்றைச் சரிவரத் தெரிந்துகொள்வதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருந்தால் வரலாற்றிற்கு ஏற்ற பகுதிகளாக அமைக்க முடியும். அரசியல் திட்டங்களும், கோட்பாடுகளும், மதக் கொள்கைகளும், வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய ஊண், உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் வரலாற்றில் அடங்கும் என்கிறது கலைக்களஞ்சியம் (148).

      சரித்திரம், சரிதம், சரிதை, பூர்வீக சரித்திரம், விருத்தாந்தம், வாழ்க்கை வரலாறு, ஜீவிதசரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம் என வரலாறுக்குப் பல பொருண்மைகளைச் சுட்டுகிறது தற்காலத் தமிழ்ச் சொற்களஞ்சியம் (2001:324).

      ஒழுங்கு, மூலம், சங்கதி, நிகழ்ச்சிமுறை, சரித்திரம், பூர்வசரித்திரம், விவரம், உபாயம், உதாரணம், வமிசாவலி, வரலாற்றுமுறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு, கதை, வருதலின் வழி, பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு, வரலாறு காணாத கூட்டம், கால அடிப்படையில் அறியும் படிப்பு, முன் வரலாறு, செய்தி, வழிவகை, எடுத்துக்காட்டு, சரிதை, விருத்தாந்தம், ஜீவித சரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம், அரசியல் திட்டங்களும் கோட்பாடுகளும், மதக்கொள்கைகளும் வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய உணவு, உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் மேற்குறிப்பிட்ட வரலாறு எனும் சொல்லுக்குப் பொருளாக அமைகின்றன.

 


சனி, 15 மே, 2021

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

 

திருத்தி எழுதப்பட வேண்டிய தமிழர் வரலாறு

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயமுத்தூர் – 28

 

வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்கிறார் கா.ராஜன் (2010.1) அவ்வகையில் ஓர் இனத்தின் வரலாற்றை எழுதுவதற்கு இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்றவை முதன்மை சான்றுகளாக அமைகின்றன.

 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே (நன்.சொல்.462)

 

என்ற நன்னூலார் கூற்றுக்கிணங்க சொல்லையும் பொருலையும் மட்டுமல்ல வேண்டிய போது வரலாற்றையும் கூட மாற்றி எழுதப்பட வேண்டும்

சான்றாக

      வடக்கே கரப்பா, மொகஞ்சந்தாரோ பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத்தான் நகர நாகரிகம் உண்டு என்பதையும் தெற்கே வாழ்ந்த தமிழர்களுக்கு நகர நாகரிகம் கிடையாது என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து. இக்கருத்தை மாற்றி எழுதுவதற்கு தக்க சான்று சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல் தமிழர்கள் பெரும் சுவர்கள் கொண்ட நகர்புரத்தில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. இத்தொல்லியல் சான்றுகளை முதன்மை சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்து இளைய தலைமுறையினருக்குப் புதிய வரலாற்றைக் கடத்த வேண்டும். கடத்தும் செயலைத் தமிழக அரசே கையிலெடுக்க வேண்டும். இதன் வாயிலாக தமிழர்களின் வரலாறும் வாழ்வும் புத்துயிர்பெரும்.



 

வியாழன், 13 மே, 2021

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு - (The role of YouTube in teaching and learning in Tamil)

 

தமிழ் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு

The role of YouTube in teaching and learning in Tamil

 

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ் உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.),

கோயம்புத்தூர் - 641 028.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்.312:2) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து (குறள்.398) கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றிவேற்கை.35) அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்,… புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் (பாரதியார்) கல்வியில்லாத பெண்கள், களர்நிலம் (பாரதிதாசன்) போன்ற  இலக்கியக் கருத்தாக்கங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதை விளக்குவதாக அமைகின்றன. 

கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளிலிருந்த தமிழ் கருத்தாக்கங்கள் அனைத்தும் காகிதப் பிரதிக்கு ஏற்றம் பெற்றதைப் போல. குருகுலக் கல்வி, மரத்தடிக் கல்வி, ஓர் ஆசிரியர் பள்ளிக் கல்வி போன்றவையெல்லாம் இன்று இணைய வழிக் கல்விக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இன்றைய கல்விச் சூழலில் மாணாக்கர்கள் மனதிலும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மனதிலும் இணையவழிக் கல்வி என்பது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்தவகையில் தமிழ்க் கற்றல் கற்பித்தலில் யூடியூப்பின் பங்கு எவ்வளவு இன்றியமையாமையாக இருந்துவருகிறது என்பதையும் அதன் நன்மை, தீமைகளையும் ஆராய்ந்து விளக்கும் முகமாக இக்கட்டுரை அமையும்.