புதன், 8 டிசம்பர், 2021

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

அழகிழந்த செருப்பு - கவிதை (கடங்காரக் கடவுள்) முனைவர் ந.இராஜேநந்தின்

 

நெடுநாள் ஆசைப்பட்டு

ஆசை ஆசையாய் வாங்கிய செருப்பு

பலநாள் என் பாதத்தில்

படிந்திருக்க வேண்டுமென்ற வேட்கையில்

செருப்புத் தைப்பவரிடம் கேட்டேன்

கூலி என்னவென்று...

சோடிக்கு இருபது என்றார்

பதினைந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்

 

ஒரு ஐந்துக்காக

காலணியைக் கலங்கப்படுத்தி

கண்களில்

கண்ணீரை வரவழைத்துவிட்டார்

 

ஒரு வாரம்தான் ஆனது

அந்தச் செருப்பு வாங்கி

அப்படியே

போட்டிருந்தால் கூட

ஆறு மாதம் உழைத்திருக்கும்

 

அவசரப்பட்டுத் தைத்ததில்

அறுபட்ட கழுத்தாய்

அழகிழந்து...

அனாதையாய்க் கிடந்தது

ஆசை ஆசையாய் வாங்கிய

அந்தச் செருப்பு .



செவ்வாய், 7 டிசம்பர், 2021

நட்பு

 

நட்பு

‘நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா’ என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். கூடா நட்பு கேடாய் முடியும் என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார் என்றால் நாம் சிந்திக்க வேண்டும். ஆக வள்ளுவர் காலத்திலும் சரி கணினி யுகமாக விளங்கும் இக்காலத்திலும் சரி தீய செயல்கள் செய்யும் நண்பர்கள் நம்நருகில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொரானநோய்க்கு உட்பட்டவர் என்றெண்ணி தள்ளி இருப்பது நல்லது.

தீ நட்பு பெருகலின் குன்றல் இனிது

துரியோதனன் கரவாக உறவுகூறித் தன் அரண்மனைக்கு வந்துபோகும்படி தருமனை அழைத்த பொழுது அத்தீயவனோடு நட்புகொள்ளுதலினும் கொள்ளாமையிருப்பது நல்லதென்று வீமன் கொதித்துக் கூறியுள்ளது ஈண்டுக் நோக்கத்தக்கது.

வெள்ளி, 29 அக்டோபர், 2021

அன்பின் ஐந்திணை


அன்பின் ஐந்திணை

(முதல், கரு, உரி)

 

தமிழிலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கப்படும் பொழுது, ஒரு திணைக்கு உரியபொருள் அத்திணையின் உரிப்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஐந்து நிலங்களுக்குரிய ஒழுக்கங்களாகபுணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவையும் அவற்றின் நிமித்தமும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணைகளின் உரிப்பொருள் எனப்படும்.

அன்பின் ஐந்திணை

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது. தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர்.

வியாழன், 28 அக்டோபர், 2021

எழுத்துகளின் பிறப்பு

 

எழுத்துகளின் பிறப்பு

 

தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றியும் அதன் தொகை பற்றியெல்லாம் அறிந்துகொண்ட நாம், அடுத்து எழுத்துகள் எவ்வாறு எங்குப் பிறக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ளுதல் வேண்டியது அவசியமானதாகும். எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.

 

உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களில் தங்கி, உதடு, நாக்கு, பல், மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

 

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

புதன், 27 அக்டோபர், 2021

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில்

 

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில் இது. மதுரையை ஆண்ட பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஆனால் எந்தப் பாண்டியர் காலம் என்று தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் பூசை நடந்ததில்லை. சமிப காலமாக அந்த லிங்கத்திற்கு அருகில் உள்ள வயல்காரர் எப்பவாவது வெள்ளி, செவ்வாய் கிழமையில் பூ போட்டு சூடம் ஏத்தி சாமி கும்பிடுவார் என்கிறார் செ.அன்னதாஜ்.

ஆக கருங்கல்லால் லிங்கத்தின் பீடமும் லிங்கம் எட்டுப் பட்டையாகவும் இருப்பாதல் (லிங்கத்தைக் காணவில்லை) கோயில் கல்லால் ஆன கோயிலாக இருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. ஆனால் கோயில் போர்க் காரணமாக அழிக்கப் பட்டதா? அல்லது இயற்கையாகவே அழிந்து போனதா? எனத் தெரியவில்லை. கோயில் இருநததர்கான அடையாளமும் அழிக்கப்பட்டுள்ளது. 

லிங்கத்திற்கு அருகே ஒரு செம்பிரான் கல் ஒன்று மட்டும் கிடக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கோயில் செம்பிரான் கல்லால் எழுப்பப்பட்டதாகவும் இருக்கலாம்.