திங்கள், 19 ஜனவரி, 2026

நாலடியார் (பொருட்பால் - நல்லினம் சேர்தல்)



நாலடியார்

(பொருட்பால் - நல்லினம் சேர்தல்)

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த்தாக வைத்துச் சிறப்பிக்கப்படும் நூல் நாலடியார். இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. நான்கடி வெண்பாக்களால் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் சிறப்புற உரைப்பது நாலடியார். இந்நூலிற்கு நாலடி நானூறு என்றும் 'வேளாண் வேதம்' என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கிறது. இத்தகு நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை

கடவுள் வாழ்த்து : 1

அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)

பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)

காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்)

மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

 

 விழுமியம் - நல்லோர் நட்பு

 

நாலடியார் - 171 (நல்லினம் சேர்தல்)

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக்கெடுமே வெயில் முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.   (171)

 

வெயில் காயக் காயப் புல்லில் இருக்கும் பனித்துளி மறைந்துவிடுவதைப்போல, ஒருவன் தன் அறியாப் பருவத்தில் ஒழுக்கம் இல்லாத தீயவரோடு சேர்ந்து செய்த தீமைகள் எல்லாம்  நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது முன்னே அவன் செய்த தீமைகள் எல்லாம் மறந்துபோய்விடும்.

 

நாலடியார் - 172 (பெரியார் வாய்ச்சொல்)

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்”. (172)

 

உயிரைக் எடுக்கும் எமனுக்குப் பயப்படுங்கள். பிறர் கடுஞ்சொல் சொன்னால் அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பிறர் தனக்குச் செய்யும் வஞ்சகச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். செயலில் தீமை செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள். இதுவே பண்பில் பெரியவர் வாயிலிருந்து வரும் நற்சொற்களாகும்.

 

 நாலடியார் - 175 (கீழோரும் மேலோரைச் சேர்ந்தால், மேலோரேயாவர்)

ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்

பேரும் பிறிது ஆகித் தீர்த்தம்ஆம்; - ஓரும்

குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்

நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.   (175)

 

ஊரில் ஓடும் சாக்கடை நீர் அதிகமாக ஓடும் ஆற்று நீரில் கலக்கும்போது அதன் பெயர் "சாய்க்கடை" என்பது மாறித் "தீர்த்தம்" என்று ஆகிவிடும். அதுபோலக், குலத்தால் தாழ்ந்தவர் நல்ல மாண்பு மிக்க நல்லவரைச் சேரும்போது தாழ்ந்தவர்கூட மலை போல் உயர்ந்து நல்லவராக நிற்பர்.

 

நாலடியார் - 176 (உயர்ந்தோருடன் உறவு)

ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய

அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;

குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,

குன்றன்னார் கேண்மை கொளின்.   (176)

 

நிலாவில் முயல் போன்ற நிழல் களங்கம் இருக்கிறது. நிலாவைத் தொழுவோர்  அந்த முயல் களங்கத்தையும் தொழுவர். அதுபோல, தன்னளவில் சீர்மை குன்றியவர் ஆனாலும்  சீர்மையில் குன்று போன்றவர் நட்பினைப் பெறுவாரேயானால்,  அவர் சிறப்பினைத் தாமும் பெறுவர்.

 

நாலடியார் - 178 (நல்லோர் தொடர்பே நல்லது)  

கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல்

ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;

மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல்

செல்லாவாம் செற்றார் சினம்.   (178)

 

நிலத்தில் நிற்கும், மரம் வெட்டிய குத்துக் கட்டைக்கு "குற்றி" என்று பெயர். உழவர் நிலத்ததை உழும்போது அந்தக் குற்றியின் ஓரமாக முளைத்திருக்கும் புல்லை உழும் மாடு விலகிச் செல்வதால் உழவரின் கலப்பையில் அகப்படாமல் தப்பித்துக்கொள்ளும்.  அதுபோல, வலிமை இல்லாதர் வலிமை உடையவரோடு சேர்ந்திருக்கும் போது, பகைவரின் சினம் வலிமை இல்லாதரை ஒன்றும் செய்துவிட முடியத்து.

 

நாலடியார் - 179 (நல்லோரையும் தீயோர் கெடுப்பர்)

நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தம்

குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை

தீயினம் சேரக் கெடும்.   (179)

 

நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல, சான்றோர் தம் குலத்தின் நலத்தால் உயர்வர். கடலில் செல்லும் மரக்கலத்தைச் சூறாவளி காற்றுத் தாக்கிக் கெடுப்பது போல, நற்குணங்கள் உடைய ஒருவர் தீயோருடன் சேரும்போது நல்லவரின் நற்குணங்கள் கெட்டுப்போகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading